மலையக பகுதிகளில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக மக்கள் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக கடும் காற்றுடன் கூடிய அடை மழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழக்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள பல கிராம பகுதிகளில் கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவி வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு மூன்று தினங்களில் பாடசாலை மாணவர்களின் வரவு சற்று குறைந்துள்ளதாக பாடசாலை நிர்வாகங்கள் தெரிவித்தன.
இந்த அசாதாரண காலநிலை காரணமாக 13.07.2018 அன்று இரவு 08 மணியளவில் வீசிய கடும் காற்று காரணமாக தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகொடை சின்ன கணக்கு தோட்டப்பகுதிகளில் உள்ள 3 வீடுகளின் கூரைத் தகடுகள் அள்ளுண்டு போயின.இதனால் குறித்த வீடுகளில் இருந்த உபகரணங்கள் பல சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் பிரதேச மக்களின் துணையுடன் சேதமடைந்த வீடுகளை சீர் செய்யும் நடவடிக்கையை தோட்ட பொதுமக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
மலையக பகுதியில் தொடர்ச்சியாக வீசும் பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழக்கூடிய இடங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் மற்றும் தோட்ட நிர்வாகம் கோரியுள்ளது.