அரசியலமைப்புச் சபையினால் அரசியல் நோக்கங்களை மட்டும் கருத்தில் கொண்டு வழங்கப்படும் நீதிபதி நியமனங்களினால் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்துவதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
அரசியலமைப்புச் சபையினால் வழங்கப்படும் உயர் பதவிகள், சிரேஷ்ட தன்மை மற்றும் அனுபவம் என்பவற்றை அடிப்படையாக வைத்து வழங்கப்படுவதில்லையெனவும், அரசியல் நோக்கங்களை வைத்தே வழங்கப்படுகின்றது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர், அரச கணக்காய்வாளர், நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் அரசியலமைப்பு சபையினூடாகவே நியமிக்கப்படுகின்றனர்.
அரசியலமைப்புச் சபை எவ்வாறு உயர் பதவிகளுக்கு நியமனங்களை வழங்குகின்றது என்பன தொடர்பில் சட்டங்களை வகுத்து அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், அச்சபை இதுவரையில் அதனைச் சமர்ப்பிக்க வில்லை. இந்த விடயம் இச்சபையின் மீது இன்னும் சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.