உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா 240 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் படுதோல்வியடைந்தது. உலகக்கோப்பை தொடருக்கு செல்வதற்கு முன்பே கிரிக்கெட் விமர்சகர்கள் நான்காவது இடத்தில் களம் இறங்க பியூர் பேட்ஸ்மேன் இல்லை என்று குற்றம்சாட்டினர்.
அப்போது சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் 4-வது இடத்தில் வீரர்களை களம் இறக்கிக் கொள்வோம் என்று அணி நிர்வாகம் கூறியது. லீக் போட்டிகள் முழுவதும் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடியதால் அந்தக் குறை தெரியவில்லை.
அரையிறுதியில் 5 ரன்களுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்ததால் நான்காவது பேட்ஸ்மேன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் இந்திய அணியின் தேர்வுக்கு தலைவராக திலிப் வெங்சர்க்காரும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து திலிப் வெங்சர்க்கார் கூறுகையில் ‘‘விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தொடக்கத்திலேயே ஆவுட்டாகிவிட்டால், 4-வது இடத்தில் களம் இறங்க தரமான பேட்ஸ்மேன் தேவை என்று அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து கூறி வருகிறேன்.
இந்த பிரச்சனை அரையிறுதி வரை எழும்பவில்லை. ஏனென்றால், அவர்கள் இருவரும் ஒவ்வொரு போட்டியிலும் ரன்கள் குவித்தனர். இறுதியில் அவர்கள் இருவரும் ஆட்டமிழந்தபோது நாம் 240 ரன்களை சேஸிங் செய்ய 4-வது பேட்ஸ்மேனை தேடவேண்டிய நிலை ஏற்பட்டது.
நாம் நான்கு விக்கெட் கீப்பர்களுடன் விளையாடியது விசித்திரமாக இருந்தது. நான்கு விக்கெட் கீப்பர்களுடன் விளையாடும் ஒரே அணி இந்தியா மட்டுமே. கிரிக்கெட் வரலாற்றில் இப்படி நிகழ்ந்தது கிடையாது.
ஆடும் லெவன் அணி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. திட்டம் ‘ஏ’ அரையிறுதி வரை சரியாக இருந்தது. ஆனால், அரையிறுதியில் பிளான் ‘ஏ’ எடுபடாத நேரத்தில், திட்டம் ‘பி’-ஐ செயல்படுத்த முடியாமல் போனது’’ என்றார்.