இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 2க்கான கடைசிப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க களத்தடுப்பை முதலில் தெரிவு செய்தார்.
இதற்கு அமைய பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இன்றைய போட்டியில் இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
உபாதைக்குள்ளான குசல் மெண்டிஸுக்கு பதிலாக காமில் மிஷார விக்கெட் காப்பாளராக விளையாடவுள்ளார். காமில் மிஷார சில உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளையாடி இருந்தார்.
அத்துடன் சுழல்பந்துவீச்சாளர் துஷான் ஹேமன்தவுக்கு பதிலாக சகலதுறை வீரர் ஜனித் லியனகே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
பாபர் அஸாம், சய்ம் அயூப், சல்மான் மிர்ஸா ஆகியோர் நீக்கப்பட்டு கவாஜா நபே, நசீம் ஷா, அப்ரார் அஹ்மத் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அணிகள்
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, காமில் மிஷார, சரித் அசலன்க, பவன் ரத்நாயக்க, கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக்க (தலைவர்), ஜனித் லியனகே, துனித் வெல்லாலகே, துஷ்மன்த சமீர, மஹீஷ் தீக்ஷன, டில்ஷான் மதுஷன்க.
பாகிஸ்தான்: சாஹிப்ஸதா பர்ஹான், பக்கார் ஸமான், சல்மான் அலி அகா (தலைவர்), கவாஜா நபே. உஸ்மான் கான், ஷதாப் கான், மொஹம்மத் நவாஸ், ஷஹீன் ஷா அப்றிடி, நயீம் ஷா, அப்ரார் அஹ்மத் உஸ்மான் தாரிக்.
