நாட்டின் அபிவிருத்திக்குத் தடையாகவுள்ள அத்தனை அம்சங்களையும் இந்த நாட்டின் உயர் மட்டத்திலிருந்து மாற்றிக் காட்டுவோம் எனவும், இதற்காக ஒரு தடவை மக்கள் விடுதலை முன்னணிக்கு உங்கள் ஆதரவை தந்துபாருங்கள் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான ஜாதிக ஜன பலவேகய கூட்டணியின் வேட்புமனுத் தாக்கலின் பின்னர் முதலாவது பிரசாரக் கூட்டம் தம்புத்தேகமவில் நேற்று (8) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த நாடு சுதந்திரத்தின் பின்னர், பல தரப்பினராலும் சூரையாடப்பட்டு வருகின்றது. முதலில் நாட்டின் அபிவிருத்திக்கு தடையாகவுள்ள அத்தனை முறைமைகளையும் மாற்ற வேண்டும். கோடிக் கணக்கில் முன்னெடுக்கப்படும் செலவினங்களை ரத்து செய்ய வேண்டும்.
நாட்டிலுள்ள ஊழலுக்கு வழிகோலும் முறைமைகளை மாற்றம் செய்யாமல், வெளிநாட்டுக் கடனிலிருந்து மீள முடியாது. நாட்டின் பிரதான இடத்திலிருந்து இதனை ஆரம்பிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.