இயேசுபிரான் பாலகனாய் மண்ணில் அவதரித்த திருநாளான நத்தார் பண்டிகை இலங்கையில் தலைநகர் கொழும்பு, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என சகல பிரதேசங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
தலைநகர் கொழும்பில் நேற்றிரவு விசேட திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு பண்டிகை ஆரம்பிக்கப்பட்ட அதேவேளை, இன்று காலையும் விசேட வழிபாடுகள் இடம்பெற்று நத்தார் கொண்டாட்டம் இடம்பெற்று வருகின்றது.
வடக்கில் குறிப்பாக யாழ்.மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை ஆலயத்தில் யாழ்.மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன்போது ஆலயத்துள் அமைக்கப்பட்ட யேசு பாலகனின் பிறப்பபை வெளிப்படுத்தும் பாலன் குடில் ஆயர் அவர்களினால் ஒளியேற்றப்பட்டது. நாட்டில் வாழும் சகல மக்களும் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழ பிறந்துள்ள யேசுபாலன் வழிகோரவேண்டி விசேட ஆராதனைகளும் நடைபெற்றது
பாசையூர் அந்தோணியார் ஆலயத்திலும் நத்தார் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு இராயப்பர் தேவாலயத்திலும் சிறப்பு நத்தார் திருப்பலி பூஜை இடம்பெற்றது. யாழ்.மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் தோமஸ் சௌவுந்தரநாயகம் ஆண்டகையின் தலைமையில் விஷேட ஆராதனைகள் நடைபெற்றன.
பாலகன் கிறிஸ்துவின் பிறப்பை முன்னிட்டு முறிகண்டி குழந்தை யேசு ஆலயத்திலும், இலங்கை திருச்சபை ஆலயத்திலும் நேற்று நள்ளிரவு திருப்பலி கொடுக்கப்பட்டது. இன்று காலை முறிகண்டி தென்னிந்திய திருச்சபை ஆலயத்தில் விசேட நத்தார் வழிபாடுகள் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் இம்முறை வெள்ளம் புரட்டிப்போட்டுள்ளது. இதனால் பெருமளவான மக்கள் முகாம்களில் தங்கியுள்ளதால் கொண்டாட்டம் சோபையிழந்து காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
வவுனியாவில், இலங்கை திருச்சபை புனித ஆவியானவர் ஆலயத்தில் நத்தார் விசேட ஆராதனைகள் சிற்ப்பாக இடம்பெற்றிருந்தது. ஆலயத்தின் பங்குத்தந்தையின் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆராதனைகள் நள்ளிரவு 11.30 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ச்சியாக இடம்பெற்றிருந்தது.
இதன்போது நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு நத்தாரை வரவேற்றதுடன் ஒருவருக்கொருவர் நத்தார் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
அதேபோல் மன்னார் மாவட்டத்தில், நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நத்தார் தின நள்ளிரவு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அருட்தந்தை சௌவுல் நாதன் அடிகளார் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்றன. குறிப்பாக தாண்டவன்வெளி ஆலயம் மற்றும் மட்டக்களப்பு புனித மரியாள் தேவாயலத்தில் பெருநாள் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு, மலையகத்தில் குறிப்பாக ஹட்டன் நகரத்தில் உள்ள திருச்சிலுவை தேவாலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட்தந்தை நியூமன் பீரிஸினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலையும் ஆராதனைகள் இடம்பெற்று நத்தார் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
மலையகத்தில், புஸ்ஸல்லாவ புனித திருத்தவ தேவாலயத்திலும் நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, சிலாபம் மறை மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்கள் செறிந்து வாழும் புத்தளம், ஆனமடு, வண்ணாத்திவில்லு, கற்பிட்டி, தலவில், மாம்புரி, பாலாவி, மதுரங்குளி, முந்தல், ஆராச்சிக்கட்டு, சிலாபம், மாதம்பை, மகாவௌ, மாரவில், நாத்தாண்டி மற்றும் வென்னப்புவ ஆகிய பிரதேசங்களில் நத்தார் கொண்டாட்டம் களைகட்டியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று இரவு நத்தார் நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன.
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நள்ளிரவு ஆராதனைகளில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்ததோடு, நாட்டின் நிலையான சமாதானத்திற்காய் பிரார்த்தனை இடம்பெற்றது.
குறிப்பாக இம்முறை வடக்கு மாகாணத்தில் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அம்மக்களின் நலனுக்காய் பிரார்த்தனைகள் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

