தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பிய 166 பேர் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக கொரோனா தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நாடு திரும்பிய நிலையில், இவ்வாறு மட்டக்களப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இலங்கைக்கு வந்த 166 பேரில் 164 பேர் இலங்கையர்கள் எனவும் 2 பேர் கொரியர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது
கொரோனா தனிமைப்படுத்தல் மையங்களாக வத்தளை, ஹெந்தலை பகுதியிலுள்ள தொழுநோய் வைத்தியசாலை, கந்தக்காடு புனர்வாழ்வு மையம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் ஆகியன தெரிவு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், ஹெந்தல பகுதி மக்கள் நடத்திய தொடர் போராட்டங்களையடுத்து அரசாங்கம் அந்த முடிவிலிருந்து பின்வாங்கியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்தோடு, கொரோனா தனிமைப்படுத்தல் மையமாக மட்டக்களப்பு மாத்திரமே செயற்படவுள்ளதாக கூறப்பட்டது.
எனினும் இதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் மறுப்பு தெரிவித்திருந்தார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் சென்று சோதனை செய்யவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் பொய்யானவை என்றும் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும் இன்று காலை நாடு திரும்பிய 166 பேர் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக கொரோனா தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.