பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக சொத்துகளை கொள்வனவு செய்து நிதி மோசடி மேற்கொண்ட வழக்கில் துரிதமாக தண்டனை வழங்குமாறு நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான காணொளியொன்று வெளியாகியுள்ளமையால் பாகிஸ்தான் சட்டத்துறையினர் கடும் அதிருப்தியை வௌியிட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் (வயது 68), வெளிநாடுகளில் சட்ட விரோதமாக சொத்துகள் கொள்வனவு செய்த பிரபலங்கள் பற்றிய ‘பனாமா ஆவண கசிவு’ விவகாரத்தில் சிக்கியதால் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதில் அவர் குற்றவாளி என பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அவரது பதவியும் பறிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் 3 ஊழல் வழக்குகளை பாகிஸ்தான் லஞ்ச ஒழிப்பு பொலிஸார் பதிவு செய்தனர். அதில் ஒன்று அல்-அஜிசியா உருக்காலை ஊழல் வழக்காக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழங்கில் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதால், அவரை குற்றவாளி என கருதி 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து இஸ்லாமாபாத் பொறுப்புடைமை நீதிமன்ற (ஊழல் தடுப்பு) நீதிபதி முகமது அர்ஷாத் மாலிக் கடந்த வருடம் தீர்ப்பளித்தார்.
அதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப், லாகூர் காட்லக்பத் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.