பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்,மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் இருவரும் நேற்று இரவு லண்டனிலிருந்து திரும்பி வந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ´பனாமா கேட்´ ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அந்த நாட்டின் உயர் நீதிமன்றத்தால் பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் அவர் பிரதமர் பதவியையும் இழந்தார். அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தவும் உயர் நீதிமன்றம் அப்போது உத்தரவிட்டது.
இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியதாக நவாஸ் ஷரிப் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றில் ´அவென்பீல்டு´ வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில், நவாஸ் ஷரிப் அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் கப்டன் சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்தது.
அதைத் தொடர்ந்து நவாஸ் ஷரிப்புக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், கப்டன் சப்தாருக்கு 1 ஆண்டும் சிறைத் தண்டனை விதித்து கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதற்கிடையே, லண்டன் நகரில் புற்றுநோயால் அவதியுற்று வரும் மனைவி குல்சூம் நவாசை சந்திப்பதற்காக நவாஸ் ஷரிப் மகள் மரியம் நவாசுடன் அங்கு சென்றார்.
அங்கு குல்சூம் நவாஸ் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் நவாஸ் ஷரிப், மகள் மரியம் நவாசுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு பாகிஸ்தான் திரும்புவதாக தகவல்கள் வெளியாகின.
லண்டனில் இருந்து அபுதாபி சென்ற நவாஸ் ஷரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் அங்கிருந்து விமானம் மூலம் பாகிஸ்தான் புறப்பட்டு வந்துகொண்டிருப்பதாக தெரியவந்தது.
இதற்கிடையே லாகூர் அல்லது இஸ்லாமாபாத்தில் விமானத்தில் வந்து இறங்கியதும் நவாஸ் ஷரிப்பையும், மகள் மரியம் நவாசையும் கைது செய்ய தேசிய பொறுப்புடைமை முகமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவர்களை கைது செய்து ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று இரவு சுமார் 9.15 மணியளவில் நவாஸ் ஷரிப் வந்த விமானம் லாகூர் விமான நிலையத்துக்கு வந்தடைந்தது. விமானத்தில் இருந்து இறங்கி வந்த நவாஸ் ஷரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஷரிப் ஆகியோரை கைது செய்த அதிகாரிகள் பாதுகாப்பு படையினர் சூழ, சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.