பிரபல திரை நட்சத்திரம் ஹேமால் ரணசிங்க கைது செய்யப்பட்டமைக்கான உண்மையான காரணத்தை வெள்ளவத்தை பொலிஸார் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி வெள்ளவத்தை ஹவ்லொக் சிட்டி வணிக வளாகத்தில் அமைந்துள்ள திரையரங்கிற்கு முன்னால் நடைபெற்ற புதிய திரைப்படமொன்றின் ஆரம்ப விழாவின்போது, அங்கிருந்த விளம்பர நிறுவன கலைஞர் ஒருவரைத் தாக்கியதாக ஹேமால் ரணசிங்க மீது முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு சமுகமளிக்குமாறு அவருக்கு பலமுறை அறிவிக்கப்பட்டபோதிலும், அவர் அதனைத் தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று (03) அவர் தனது சட்டத்தரணி ஊடாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையானபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பான CCTV காணொளி ஆதாரங்களை பொலிஸார் ஏற்கனவே கைப்பற்றி கல்கிசை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதுடன், மேலதிக விசாரணை அறிக்கைகளுடன் சந்தேக நபரான நடிகர் ஹேமால் ரணசிங்க இன்றைய தினமே நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, பின்னர், விடுவிக்கப்பட்டார்.

