அணி உரிமையாளர்கள் தோனி மீது வைத்த நம்பிக்கை தான் சென்னை அணி கோப்பை வெல்ல உதவியது,’’ என கங்குலி தெரிவித்தார்.
ஐ.பி.எல்., 11வது சீசனில் இரு ஆண்டு தடைக்குப் பின் களமிறங்கிய சென்னை அணி கோப்பை வென்று சாதித்தது. இதுகுறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி கூறியது: கடந்த இரு சீசனில் தோனி புனே அணிக்காக விளையாடினார். தொடர்ந்து இவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. 2017ல் இவரிடம் இருந்து கேப்டன் பதவியை பறித்து ஸ்மித்திடம் தந்தனர். இம்முறை அப்படியல்ல. 11வது சீசனில் தோனி ‘ரிலாக்சாக’ காணப்பட்டார்.
கடந்த முறை புனே அணிக்காக 260 ரன்கள் மட்டும் எடுத்த தோனி, இம்முறை மூன்று அரைசதங்கள் உட்பட 455 ரன்கள் குவித்தார். பேட்டிங் மட்டுமன்றி விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். இவரது திட்டங்கள் எல்லாம் அசத்தலாக இருந்தன.
புனேயை விட, சென்னை அணி நிர்வாகம் தோனி மீது அதிக நம்பிக்கை வைத்தது. விளையாட்டு வீரர் நன்கு செயல்பட வேண்டும் எனில் அவர் மீதான எண்ணம் நன்றாக இருக்க வேண்டும். நிர்வாகத்தின் ஆதரவு காரணமாக சென்னை அணியுடன் ‘ஸ்பெஷல்’ இணைப்பு இருப்பதாக தோனி உணர்ந்தார்.
மீண்டும் கோப்பை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தை இது தான் அவருக்கு ஏற்படுத்தியது. கடைசியில் சென்னை அணியை சாம்பியன் நிலைக்கு கொண்டு சென்றது. இதற்கான அனைத்து பெருமையும் சென்னை அணி நிர்வாகத்தையே சாரும். இவ்வாறு கங்குலி கூறினார்.