எனக்குப் பிடித்த வீரர் டிவிலியர்ஸ் தான். சிறந்த பேட்ஸ்மேன், இவரைப் பார்த்து அதிகம் கற்றுக் கொண்டேன்,’’ என ஷிகர் தவான் தெரிவித்தார்.
இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான், 32. சமீபத்திய ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். இவர் கூறியது:
பேட்ஸ்மேன்களில் எனக்குப் பிடித்தவர் டிவிலியர்ஸ் தான். சிறந்த வீரர் என்பதை விட நல்ல மனிதர். இவரைப் பார்த்து அதிகம் கற்றுக் கொண்டேன். இவருக்கு எதிராக விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கும்.
ஐ.பி.எல்., தொடரில் தோனி (455 ரன்) பேட்டிங்கில் ரன் மழை பொழிந்தார். உலக கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டும் உள்ள நிலையில், இவர் ‘பார்மிற்கு’ திரும்பி இருப்பது நல்ல விஷயம்.
கடந்த சாம்பியன்ஸ் டிராபி (2017) தொடர் பைனலில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வென்றது. அடுத்து உலக கோப்பை தொடரில் இருவரும் மீண்டும் மோத உள்ளோம். இப்போட்டியில் பாகிஸ்தானை எப்படியும் வீழ்த்துவோம். ஏனெனில் உலக கோப்பை தொடரில் இந்தியாவை, பாகிஸ்தான் ஒருமுறை கூட வென்றது இல்லை. இந்த சாதனையை தொடர முயற்சிப்போம்.
இவ்வாறு தவான் கூறினார்.