தேசிய இளைஞர் விளையாட்டு விழா 2025 வெள்ளிக்கிழமை (19) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு வளாகத்தில் ஆரம்பமானது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிது சமன் ஹேன்னாயக்க ஆகியோரின் தலைமையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் சுபுன் விஜேரத்ன பங்கேற்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது.
அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி இளம் வீரர் வீராங்கனைகள் இதில் கலந்துகொண்டனர். பிரதேச மற்றும் மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து இந்த தேசிய மட்டப் போட்டி நடத்தப்படுகிறது.
சனிக்கிழமை (20) தடகளப் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், நிறைவு விழா எதிர்வரும் 21ஆம் திகதி இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர் தினிது சமன் ஹேன்னாயக்க, அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய இளைஞர் சக்தி, இலங்கையின் வலிமையான தன்னார்வ இளைஞர் இயக்கமான ‘யூத் கிளப்’ (Youth Club) அமைப்பிடமே உள்ளது.
இந்த இளைஞர்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், விளையாட்டின் மூலம் உருவாகும் கூட்டு முயற்சி மற்றும் சுறுசுறுப்பு அதற்கு பெரும் துணையாக இருக்கும் என்றார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன இங்கு உரையாற்றுகையில், டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸின் கூற்றை மேற்கோள் காட்டி, “திறமை என்பது ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவது மட்டுமல்ல, நாம் வீழ்ச்சியடையும் போது எவ்வளவு விரைவாக மீண்டும் எழுகிறோம் என்பதாகும்”.
எனவே, அனர்த்தங்களிலிருந்து நாடு மீண்டும் எழுவதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்றும், தேசிய இளைஞர் விளையாட்டு விழா 2025 ஐ நடத்துவது நாடாக மீண்டும் எழுவதற்கான ஒரு படியாகும் என்றார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி, தேசிய இளைஞர் கழகங்களின் சம்மேளனச் செயலாளர் மிதின கிஹான் பிரியசாத் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான இளைஞர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.





