கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் தெலுங்கு நடிகர் அபிஷேக்கை நடிகர் விமல் குடிபோதையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியதாக வளசரவாக்கம் போலீசில் அபிஷேக் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விமலை தேடி வந்தனர். இந்த நிலையில் அன்று நடந்தது என்ன என்பது பற்றி விமல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
அந்த அடுக்குமாடி குடியிருப்பு எனக்கு நன்கு அறிமுகம். நண்பர்கள், உறவினர்கள் என்னை தேடி வெளியூரில் இருந்து வந்தால் அங்குதான் தங்க வைப்பேன். மதுரையில் இருந்து அன்று என் நண்பர் ஒருவர் வந்திருந்தார். அன்று எனது சொந்த ஊரில் சித்தப்பா இறந்து விட்ட தகவல் கிடைத்தது. அதனால் நண்பரை தங்க வைப்பதற்காக அந்த அப்பார்ட்மெண்டுக்கு அழைத்துச் சென்றேன். வழக்கமாக அங்கு இருக்கும் மானேஜர் இல்லை. வரவேற்பு அறை அருகில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவரை அப்பார்ட்மெண்டின் பணியாளர் என்று நினைத்து, அறை இருக்கிறதா என்று விசாரித்தேன்.
அவர் நான் பணியாளர் இல்லை. நானும் கெஸ்ட்தான் என்று சொல்லியிருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர் நான் யார் தெரியுமா? என்னை எப்படி நீங்கள் கேட்கலாம் என்று தகாக வார்த்தைகளால் சத்தமாக பேசி ஆர்ப்பாட்டம் செய்தார். நான் அவரை சமாதானம் செய்ய முயற்சித்தேன். அதற்குள் அவர் என்னை ஒருமையில் கடுமையாக திட்டியதால் நண்பர்கள் அவரை தாக்க ஓடி வந்தனர். அதற்குள் அவர், என்னை தாக்க ஆரம்பித்து விட்டார். இதனால் இருதரப்புக்கும் கைகலப்பாகி விட்டது. அதன் பிறகு மானேஜர் வந்தார். அவரிடம் விபரம் சொல்லி நண்பரை தங்கவைத்து விட்டு நான் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று விட்டேன்.
அதற்குள் மீடியாக்கள் தங்கள் கற்பனைக்கு ஏற்ப செய்தி வெளியிட்டு விட்டார்கள். நான் சித்தப்பாவின் இறுதி சடங்கில் இருந்ததால் போனை ஆஃப் செய்து வைத்திருந்தேன். சென்னை வந்ததும் போலீசிடம் விளக்கம் அளித்து விட்டேன். வழக்கு போட்டிருக்கிறார்கள். அதை சட்டப்படி சந்திப்பேன். சமாதானத்துக்கும் தயராக இருக்கிறேன். என்கிறார் விமல்.