மலேசியாவின் சாபா மாநிலம், செம்போர்னா நகரில் 20 மாதக் குழந்தை அதன் தாயினுடைய நண்பர்களால் தாக்கிக் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இதன் தொடர்பில் 16 முதல் 19 வயதுக்குட்பட்ட வெளிநாட்டுப் பெண்கள் நால்வரை போலிஸ் கைது செய்து, விசாரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 6.45 மணியளவில் அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
முகம்மது அல் சுஹைமி அல்சாரிஃப் என்ற அக்குழந்தையைச் சுயநினைவற்ற நிலையில் அதன் 23 வயது தாயார் செம்போர்னா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக போலிஸ் தெரிவித்தது.
குழந்தையைப் பரிசோதித்தபோது அதன் வலது கன்னத்திலும் இடது தொடையிலும் சிராய்ப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதய இயக்க மீட்பு சிகிச்சை மூலம் அக்குழந்தையைச் சுயநினைவுக்குக் கொண்டு வர முயன்றதாகவும் ஆனாலும் சில மணி நேரங்களில் அக்குழந்தை உயிரிழந்துவிட்டதாகவும் போலிஸ் கூறியது.
“பெண் ஒருவர் அந்தக் குழந்தையை அறைந்து, அதனைத் தூக்கி வீசியதாகவும் அதனுடைய தலைப்பகுதி கட்டிலின் விளிம்பில் படும்படி திரும்பத் திரும்ப அவ்வாறு செய்ததாகவும் அதைக் கண்ட ஒருவர் கூறினார். இன்னொரு பெண், அந்தக் குழந்தையின் முதுகில் மிதித்துள்ளார்,” என்று போலிஸ் உயரதிகாரி விவரித்தார்.
சம்பவம் நிகழ்ந்தபோது அக்குழந்தையின் தாயார் அங்கு இல்லை எனக் கூறப்படுகிறது. கைதான பெண்கள் நால்வரும் அக்குழந்தையின் தாயாருடைய தோழிகள். அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்தனர்.