அளுத்கம, தர்கா நகர் பகுதியில் விசேட தேவையுடைய சிறுவன் பொலிஸாரால் தாக்கப்பட்ட சம்பவம் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படவோ, மன்னிக்கப்படவோ முடியாததாகும். எனவே, இதனுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்படுவதோடு, அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
தர்கா நகர் பகுதியில் கடந்த 25ஆம் திகதி விசேட தேவையுடைய தாரிக் அஹமட் (வயது 14) என்ற சிறுவன் பொலிஸ் அதிகாரிகள் சிலரால் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்ட சி.சி.ரி.வி. காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து கட்சி பேதமின்றி அரசியல்வாதிகள் பலரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருக்கும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளதாவது:-
“களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த விசேட தேவையுடைய சிறுவனை அச்சுறுத்தி, உடல் ரீதியாகவும் காயமேற்படுத்திய பொலிஸாரின் செயல் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படவோ, மன்னிக்கப்படவோ முடியாததாகும். இது அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
இந்தச் சம்பவத்தால் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் விதமாகச் செயற்படும் பொலிஸாருக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்படுவதோடு, அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.