அரச பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கான புதிய மாணவர்கள் அனுமதி இம்மாதம் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பிள்ளைகள் எந்தவித சுமையும் இன்றி தமது கல்வியை இலவசமாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இலங்கை அரசு பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளது. இலவச பாடநுால், இலவச சீருடை,பௌதீக வளங்கள் மற்றும் மனித வளங்கள் என அத்தனை அம்சங்களும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.
இவ்வாறு வழங்கப்படுவதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன. சமூகத்திலுள்ள சகல தரப்பினரும் வர்க்க வேறுபாடுகள் இன்றி கல்வியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் கௌரவமாக தலைநிமிர்ந்து வாழ வேண்டும். கல்வியைப் பெறுவதற்கு தடையாக பொருளாதாரம் அமைந்து விடக் கூடாது. இவை அக்காரணங்களுள் முக்கியமானவை.
இருப்பினும், தற்பொழுது அரச பாடசாலைகளில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் என்ற பேரில் புதிய மாணவர்களை சேர்க்கும் போது பெற்றோரிடம் அதிகளவில் அறவீடுகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் எழுந்த வண்ணமுள்ளன. இவற்றுக்கு எதிராக சட்டங்கள் இருந்தும், தமது பிள்ளைகளின் கல்வி நிலைமை பாதிக்கப்படும் என்பதற்காக பெற்றோர்கள் அதனை வெளிக்கொண்டுவர பயப்படுகின்றனர்.
அரசாங்கத்தின் மூலம் தமது பாடசாலைக்குத் தேவையான வளங்களையும், கல்விச் சலுகைகளையும் பெற்றுக் கொள்ள முடியாத கையாளாகாத பாடசாலை நிருவாகம், அந்த சுமையை பெற்றோர் மீது சுமத்த முயற்சிப்பதாகவும் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கல்வியின் பெயரைக் கூறி பொருளாதாரம் உரிஞ்சப்படும் போது, வறுமையில் உள்ள பெற்றோர் கல்வியின் மீது வெறுப்புக் கொள்ளும் நிலைமை ஏற்படுகின்றது என்பது மட்டுமல்லாது, சமூகத்தில் தாங்கள் ஒதுக்கப்பட்டு நோக்கும் நிலைமைக்கும் உள்ளாகின்றனர் என்பது கவலைக்குரிய ஒன்றாகும்.