தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி ஆதரவாளர்கள் மீது கோடாரியால் தாக்குதல்!
கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமாகிய சி.சிறீதரனை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தொண்டர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் இன்றைய தினம் கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ய கிளிநொச்சி பொலிஸ் நிலையம் சென்ற குறித்த பரப்புரைக் குழுவின் தொண்டர்கள் இருவரையும், தாக்குதல் நடத்திய நபரின் மனைவியை தாக்கியதாக தெரிவித்து பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பில் சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
பொலிஸ் செல்வாக்கினை பயன்படுத்தி போலியான ஒரு முறைப்பாட்டை தொலைபேசி மூலம் வழங்கியதனை தொடர்ந்தே தமிழரசுக் கட்சியின் தொண்டர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
தாக்குதல் நடத்தியவர் பலமுறை ஊர் மக்களுடன் தகராறு மற்றும், தாக்குதல் செய்து பொலிஸ் நிலையம் சென்ற போது தனது மனைவியை தாக்கியதாக பலமுறை முறைப்பாடு செய்து சட்டத்தின் வழி தப்பியுள்ளனர் என்று கூறியுள்ளனர்.
இதன் போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகி உள்ள நிலையில் சுயேச்சைக்குழு வேட்பாளராக களமிறங்கியவரின் ஆதரவாளர்களின் இவ்வாறான அடாவடி மற்றும் செல்வாக்கினை பயன்படுத்தி சட்ட துஸ்பிரயோகங்களை மேற்கொண்டு வருகின்றார் என்றனர்.