தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மஹிந்த அணியுடன் தீவிர பேச்சில் ஈடுபட்டு வருகிறார் என்பதை நாம்நம்பகரமாக அறிந்துள்ளோம்.
குறிப்பிட்ட வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி, கடந்த சில நாட்களாக தீவிர பேச்சில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலைமையில், கடந்த சில நாட்களாகவே குறிப்பிட்ட உறுப்பினரை குறிவைத்து சு.க தரப்பிலிருந்து தொடர்ச்சியாக வலைவீசப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச குடும்பத்தின் புதல்வர் ஒருவரின் நேரடி முயற்சியில், தமிழரசுக்கட்சியின் குறித்த எம்.பியுடன் நீண்ட பேச்சுக்கள் நடந்துள்ளர்
தமிழ் அரசியல்கைதிகள் விவகாரத்தில் அண்மைக்காலமாக ஆர்வமாக செயற்பட்ட குறிப்பிட்ட எம்.பி, அரசில் இணைந்தால் தனது பிரசன்னத்தில் அரசியல்கைதிகளை விடுவித்து மக்கள் மத்தியில் ஏற்படும் கறையை நீக்கலாமென்றும் பேச்சு நடத்தினார். அதற்கு சு.க தரப்பிலிருந்து பச்சைக்கொடி காண்பிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகரான குறித்த எம்.பிக்கு ஒதுக்கப்படும் அமைச்சு பதவி குறித்த சர்ச்சையே தற்போது நீடித்து வருகிறது. வர்த்தகத்துடன் தொடர்புடைய கபினெட் அமைச்சொன்றை குறித்த எம்.பி கோரியுள்ளபோதும், மஹிந்த தரப்பு அதை வழங்க சம்மதிக்கவில்லை.
அடுத்து வரும் நாட்களில் மஹிந்த முகாமிற்கு தாவவுள்ள முஸ்லிம் கட்சி தலைவர் ஒருவரிற்காக அந்த அமைச்சு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால், குறித்த தமிழரசுக்கட்சி எம்.பிக்கு இராஜாங்க அமைச்சொன்றே ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், இராஜாங்க அமைச்சை ஏற்றுக்கொள்ள தமிழரசுக்கட்சி எம்.பி தயாராக இல்லை.
இந்த இழுபறியால் அவரது தாவல் தாமதமடைந்து கொண்டு செல்கிறது. குறிப்பிட்ட கபினெட் அமைச்சு கிடைக்காத பட்சத்தில், மஹிந்த தரப்பை ஆதரிக்கமாட்டேன் என எம்.பி தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.