தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஆரப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்று (27-01-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நீதியின் மரணம் எனக் குறிப்பிட்டு சவப்பெட்டியொன்றை போராட்டக்காரர்கள் எரித்ததுடன், அதனை உடனடியாக அகற்றுமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டம்
அத்தோடு, இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினால் நடைபாதை தடைப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்ததையடுத்து போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது.

ஏழு வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள தங்களை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்று (26-01-2026) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தது.
இருப்பினும், அதற்கு முறையான பதில் கிடைக்காத காரணத்தினால் போராட்டக் குழுவின் நான்கு உறுப்பினர்கள், சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
