வெளிநாட்டுப் பணத்தைப் பதுக்கி வைத்த குற்றச்சாட்டின் கீழ் சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல் பஷீர் மீது நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சூடானில் கடந்த 23 வருட காலமாக ஆட்சி செய்துவந்த ஓமர் அல் பஷீர், கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம் பதவியை இழந்தார்.
ஆட்சியை விட்டு நீக்கப்பட்ட அவர் ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக சூடான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், ஓமர் அல் பஷீர் தனது வீட்டில் இருந்து 69 லட்சம் யூரோக்கள், 3 லட்சத்து 51 ஆயிரத்து 770 அமெரிக்க டொலர்கள் மற்றும் 57 லட்சம் சூடான் பவுண்டுகளை முறைகேடாக பதுக்கி வைத்திருந்தது விசாரணையின் போது தெரியவந்தது.
சுமார் ஒரு மாத கால விசாரணைக்கு பின்னர் அவர் கர்ட்டோம் நகரில் உள்ள கோபெர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஓமர் அல் பஷீர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி ஏராளமான வெளிநாட்டு பணத்தை முறைகேடான வகையில் பதுக்கி வைத்திருந்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவரை பிணையில் விடுவிக்க கோரி தாக்கல்செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது