தென்னிந்தியத் திரையுலகத்தில் தெலுங்கு சினிமாதான் மற்ற மொழிகளை விட வியாபார ரீதியாக பெரிய ஏரியாக்களைக் கொண்டவை. இருப்பினும், தெலுங்குப் படங்களை விட தமிழ் மற்றும் மலையாளப் படங்கள்தான் இந்திய அளவில் கொஞ்சம் பேசப்படும் படங்களாக இருந்தன.
‘பாகுபலி’ படங்கள் வந்த பிறகு அது மாறிவிட்டது. தற்போது மற்ற தென்னிந்திய மொழிகளைவிட தெலுங்கு சினிமாக்கள் அதிகமான கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துவிட்டன.
பாகுபலி படத்திற்குப் பிறகு ராஜமௌலி இயக்கி வரும் ‘ஆர்ஆர்ஆர்’ படம் சுதந்திரப் போராட்டக் கதை என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1920களில் நடக்கும் கதை என்று அறிவித்துள்ளார்கள். அப்படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, அஜய்தேவகன், ஆலியா பட், இங்கிலாந்து நடிகை டெய்சி, சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ராம்சரணின் அப்பா சிரஞ்சீவியும் தற்போது சுதந்திரப் போராட்டக் கதை கொண்ட படமான ‘சைரா’ படத்தில்தான் நடித்து வருகிறார். இக்கதை 1800களில் நடக்கும் கதையாகும்.
அப்பா சிரஞ்சீவியும், மகன் ராம் சரணும் ஒரே சமயத்தில் சுதந்திரப் போராட்டக் கதைகளில் நடித்து வருகிறார்கள். இதில் ‘சைரா’ படம் இந்த ஆண்டு அக்டோபரிலும், ‘ஆர்ஆர்ஆர்’ 2020 ஜுலையிலும் வெளிவருகிறது. இரண்டு படங்களுமே தெலுங்கத் திரையுலகில் அடுத்த எதிர்பார்ப்புள்ள படங்களாக அமைந்துள்ளன.