இலங்கைக்கு வரும் சீனப் பிரஜைகளின் தொகை படிப்படியாக குறைந்து வருவதோடு நேற்று முன்தினம் 46 பேரும் நேற்று 30 பேருமே வருகை தந்ததாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.
சீனப் பிரஜைகளின் மனம் நோகாதவாறும் நாட்டுக்கு பாதிப்பு ஏற்பாடாதவாறும் கொரோனா வைரஸ் பிரச்சினையை கையாண்டு வருவதாக கூறிய இவர், இந்த நகர்வு தொடர்பில் சீன அரசு இலங்கைக்கு நன்றி தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் மேலும் கூறுகையில்,
நாளாந்தம் இலங்கைக்கு 15,000 வெளிநாட்டவர்கள் வருகை தருகின்றனர். தற்பொழுது இது 10 ஆயிரமாக குறைந்துள்ளது. சீன நாட்டவர்களே கூடுதலாக இங்கு வந்தார்கள். அந்தநிலை மாறியுள்ளது. வூஹான் மாநிலம் மூடப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்தவர்கள் வேறு இடங்களுக்கும் நாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்துள்ளதால் கொரோனா பரவுவது அதிகரித்துள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக இலங்கையில் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீன சுற்றுலா பயணிகள் கூட்டாக இலங்கை வருவதை நிறுத்துமாறு சீனத் தூதரகம் அறிவித்திருந்தது.
சீனப் பிரஜைகளின் மனம் நோகாது நாம் எடுத்த தடுப்பு நடவடிக்கைகளை சீனத் தூதரகம் பாராட்டியுள்ளது.என்னை சந்தித்த சீனத் தூதுவர் ,சீனப் பிரஜைகளை ஒதுக்காமல் சீனவுடனான நற்புறவை பேணி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நன்றி தெரிவித்தார். இதேவேளை சீனாவிலிருந்து பல ஆயிரம் சீன பயணிகளுடன் கப்பல்கள் வருவதாக வதந்தி பரப்பப்பட்டது.ஆனால் அவுஸ்திரேலியா போன்ற நாட்டு பயணிகளே அதில் வந்தார்கள். கப்பல் ஊடாகவும் விமானம் ஊடாகவும் வரும் சகல பயணிகளும் பரிசோதிக்கப்படுவதோடு அவர்கள் பற்றி தகவல்கள் திரட்டப்பட்டு செல்லுமிடங்கள் பற்றி கண்காணிக்கப்படுகிறது என்றார்.