சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 3.5 லட்சம் கோடி வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகில் வர்த்தக போர் தொடங்கி விட்டதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அமெரிக்கா முழுவதும் ஏராளமான சீனப்பொருட்கள் குவிந்துள்ளன. விலை மலிவாக விற்கப்படும் இந்த பொருட்களால் அமெரிக்க பொருட்களின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக அதிபர் டிரம்பிடம் வர்த்தகத் துறையினர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, சீன இறக்குமதி பொருட்களுக்கு 3.5 லட்சம் கோடி வரி விதிக்கப் போவதாக டிரம்ப் கடந்த மார்ச்சில் அறிவித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார், விமானம், சோயாபீன்ஸ் ஆகியவற்றுக்கு வரி விதிக்கப்படும் என்று சீனா எச்சரித்தது. அப்படி செய்தால் அமெரிக்க வரி 6.8 லட்சம் கோடியாக உயரும் என்று டிரம்ப் எச்சரித்தார்.
அதன்பின் இருதரப்பினரும் வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த மே மாதம் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதை தொடர்ந்து இருதரப்பினரும் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘அமெரிக்காவுக்கு ஏற்படும் இழப்பை தடுக்க அங்கிருந்து அதிகளவு விவசாய பொருட்களையும், ஊட்டச்சத்து பொருட்களையும் சீனா இறக்குமதி செய்ய வேண்டும்’ என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்பின், எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் சீன பொருட்களுக்கு வரி விதிக்கப்போவதாக வெள்ளை மாளிகை எச்சரித்தது. அதை தொடர்ந்து அவசர அவசரமாக சீனா பேச்சுவார்த்தைக்கு வந்தது. இந்த மாத தொடக்கத்தில் பீஜிங்கில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.
இதையடுத்து, அமெரிக்க வர்த்தக துறையின் அவசர கூட்டம் அதிபர் டிரம்ப் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் வர்த்தக அமைச்சர் வில்பர் ரோஸ், நிதித்துறை அமைச்சர் ஸ்டீவன் முனுசின், அமெரிக்க வர்த்தக சபை பிரதிநிதி ராபர்ட் லைத்திசர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றார்கள். சுமார் 90 நிமிடம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு 3.5 லட்சம் கோடி வரிவிதிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் வழங்கினார். சீனாவும் பதிலுக்கு வரிவிதிப்பில் ஈடுபடும் என்று கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய வர்த்தக நாடுகளான அமெரிக்கா – சீனா இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் உலக அளவில் வர்த்தக போரை ெதாடங்கி வைத்துவிட்டதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
‘சீனாவின் உரிமை பாதுகாக்கப்படும்’
அமெரிக்காவின் வரிவிதிப்பு பற்றி கேள்விப்பட்டதும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாங் கூறுகையில், ‘‘ சீனாவின் நலன்களை உடைத்தெறிந்து விட்டு, சுயநலனுக்காக அமெரிக்கா தனிப்பட்ட முறையில் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கு நாங்கள் உடனடியாக பதிலடி கொடுப்போம். எங்கள் உரிமைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.