நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் திட்டமிட்டுப் பழி வாங்கப்படுகின்றார் என கிளிநொச்சி மாவட்ட மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்
சிறீதரன் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மகஜர் ஒன்றைக் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கிளிநொச்சி மாவட்ட மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இவ்வாறு குறிப்பிட்டனர்.
அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கட்சிக்குள் நிலவும் குழப்பங்கள் ஆரோக்கியமானவை அல்ல.
கீழ்த்தரமான அரசியல் கலாசாரம்
சிறீதரன் எம்.பி. திட்டமிட்டுப் பழி வாங்கப்படுகின்றார். அவருக்கு எதிராகச் சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறான கீழ்த்தரமான அரசியல் கலாசாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, கட்சி ஒருமித்த பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதை சுமந்திரனிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றனர்.
இதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டமை கட்சியின் உட்கட்சி விவகாரமாகும்.
இருப்பினும், இதனை முழுமையாகப் பகிரங்க வெளியில் சொல்வதற்கு இது தருணமல்ல. தேவை ஏற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் உண்மைகளை வெளிப்படுத்துவோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
