உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து அமெரிக்கா தலைமையில் கூட்டுப் படை போர் நடத்தி வந்தது. சிரியா அரசுக்கு எதிரான குர்திஷ் படையினரே ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் முக்கியத்துவம் பெற்றிருந்தனர். இதனால், குர்திஷ் படைக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் உதவி செய்து வந்தன. இதற்கிடையே, சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவும், அமெரிக்க படைகள் திரும்ப அழைத்துக் கொள்ளப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டார்.
இது அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு மட்டுமின்றி, டிரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், அதிபர் டிரம்ப், துருக்கி அதிபர் தையூப் எர்டோகனுடன் நேற்று முன்தினம் இரவு தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அமெரிக்க படைகள் விலகுவதால் சிரியாவில் அதிகார வெற்றிடம் ஏற்படுவதை தடுக்க வேண்டுமென இரு தலைவர்களும் முடிவு செய்தனர்.
சிரியாவில் மீண்டும் ஐஎஸ் தீவிரவாதம் தலைதூக்கினால் அதை ஒழித்து கட்டுவோம் என துருக்கி அதிபர் உறுதி அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் விலகிக் கொள்வதற்கான உத்தரவு கையெழுத்தாகி விட்டதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்டகன் தகவல் வெளியிட்டது.
அடுத்தது என்ன?
ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடும் குர்திஷ் போராளிகள், துருக்கியில் தனி நாடு கோரி வருகின்றனர். இதனால் சிரியாவின் குர்திஷ் போராளிகளை ஒழித்து கட்ட துருக்கி துடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு தடையாக அமெரிக்க படைகள் இருந்தன. தற்போது அந்த தடை விலகியுள்ளது.எனவே, அடுத்ததாக துருக்கி படைகள் குர்திஷ் போராளிகளை தீர்த்து கட்டும்.

