கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இடம்பெற்ற சம்பமொன்றின் போது எதேட்சையாக நடைபெற்ற பயங்கரவாதி சஹ்ரானுடனான சந்திப்பை வைத்து என்னைப் பயங்கரவாதியாக காட்டுவதற்கு சில இனவாதிகள் மீண்டும் முயற்சி எடுத்துள்ளதாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா, தனக்கு தேசியப்பட்டியல் கிடைத்தபின் குண்டர்களை வைத்து எங்களது கட்சி ஆதரவாளர்களைத் தாக்கினார். அதனை பார்வையிடச் சென்ற இடமொன்றில் பயங்கரவாதி ஸஹ்ரானும் இருந்திருக்கிறான். அந்த பழைய காணொளியை வைத்தே சிலர் மீண்டும் அரசியல் லாபம் தேடுவதற்கு முற்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (19) கண்டி, கலகெதர தேர்தல் தொகுதியில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை பேணி, சகவாழ்வுக்காக பாடுபட்டுவரும் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். எமது கட்சியின் உயரிய நோக்கங்களை சிதறடிப்பதற்காக மேற்கொள்ளப்படும் இவ்வாறான கீழ்த்தரமான சதித்திட்டங்களை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த போலிப் பிரசாரம் குறித்து மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. இவற்றுக்கு முகம்கொடுக்க முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ஒருபோதும் பின்நிற்காது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.