விஜய் நடித்து கடந்த சில ஆண்டுகளாக வெளிவரும் படங்கள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அந்த சர்ச்சை தீபாவளிக்கு வெளியான ‘சர்கார்’ படத்திலும் எழுந்தது. ஆளும் அரசாங்கத்தை எதிர்க்கும் சில காட்சிகள் படத்தில் இருப்பதால் தமிழக அமைச்சர்கள் படத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர். சர்ச்சையான காட்சிகளை நீக்க வேண்டும் என்றார்கள். அதன்படி இன்று அந்தக் காட்சிகள் நீக்கப்பட்டு படத்திற்கு மறு தணிக்கை செய்யப்பட்டது.
‘சர்கார்’ படத்தில் விஜய்யின் ஹீரோயிசமான காட்சிகள் பல இருக்கின்றன. பாடல்களிலும் அப்படிப்பட்ட வரிகள் உள்ளன. திரையில் மட்டும் ஹீரோசியத்தைக் காட்டிய விஜய், நிஜத்தில் நேற்றிலிருந்து ‘சர்கார்’ பட பேனர்கள் கிழிக்கப்பட்டதற்கு எந்த விதமான எதிர்ப்பையும் காட்டவில்லை. படத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால் மற்றும் பல நடிகர்கள் தான் கருத்து தெரிவித்தனர்.
‘சர்கார்’ படத்தில் ‘ஒரு விரல் புரட்சி’ என்று பாடிய விஜய், ஒரு குரல் கூட கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. ‘வேர்ல்டு மொத்தமும் அர்ல வுடனும் பிஸ்து’ எனப் பாடிவிட்டு படக்குழு அலறிப் போய்க் கிடக்கிறார்கள் என சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சர்கார் ஆடியோ விழாவில், விஜய் சொன்னபடியே, இந்த விவகாரத்திலும் அவர் உம்முன்னு, கம்முன்னு இருக்கிறார்.