மனித எலும்பு எச்சங்கள் காணப்பட்ட சம்பூர் காணியில் மேலும் மனித எலும்புக்கூடுகள், மற்றும் எச்சங்கள் உள்ளனவா என்பதை அறிய, கிழக்கு பிராந்திய இராணுவ கட்டளைத்தளபதியின் ஆலோசனையைப் பெற்று இராணுவ பாதுகாப்பு ஆளணியின் உதவியுடன் முறைப்படி அகழ்வு நடத்தப்பட வேண்டும் என்று மூதூர் நீதவான் தஸ்னீம் பெளஸான் இன்று (6) உத்தரவிட்டார்.
மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் 26ஆம் திகதி எடுத்துக்கொள்வதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அத்துடன், இதுவரை அங்கு கண்டெடுக்கப்பட்ட மூன்று எலும்புக்கூடுகளில் ஒன்று, 25 வயதிற்கு குறைந்த ஆண் ஒருவருடையது; மற்றையது, 25 – 40 வயதுக்குட்பட்ட ஒருவருடையது; அடுத்தது 40 – 60 வயதுக்குட்பட்ட ஒருவருடையது என்றும் இன்றைய வழக்கு மாநாட்டின்போது மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய சட்ட வைத்திய அதிகாரி,
இந்த இடம் மயானம் என்பதற்கு இதுவரை ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட எலும்பு எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த எச்சங்களுக்குரியவர்கள் இயற்கையாக மரணம் அடைந்தார்களா?அல்லது ஏதேனும் குற்றச்செயல்கள் மூலம் மரணம் நிகழ்ந்ததா? என்பதை கண்டறிய மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.
இக்காணி அரச காணியாக உள்ளபோதும் இங்கு ஒரு மயானம் இருந்ததற்குரிய ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று இந்த வழக்கு மாநாட்டில் தொல்பொருள் திணைக்களம், பிரதேச செயலக செயலாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரால் அறிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த அறிக்கைகளை ஆராய்ந்த பின்னரே நீதிமன்று அகழ்வு நடத்தப்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.
இன்றைய வழக்கு மாநாட்டில் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்கள அதிகாரி, புவிச்சரிதவியல் துறை அதிகாரி, பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர், தேசிய கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினர், மெக் மிதி வெடி அகற்றும் நிறுவனத்தினர், பிரதேச செயலாளர், பிரதேச சபைச் செயலாளர், காணாமல் ஆக்கப்பட்டோர் தேசிய செயலகத்தின் சட்டத்தரணி, பிரதேச காணி உத்தியோகத்தர், பிரிவிற்கான கிராம சேவை அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடந்த ஜூலை 19ஆம் திகதி மிதிவெடி அகற்றும் பணிகள் அப்பகுதியில் செயற்படுத்தப்பட்டபோது, மனித மண்டையோடு, கால் எலும்பு என்பன கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, கடந்த 23ஆம் திகதி சம்பவ இடத்தை மூதூர் நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டார்.
அதனையடுத்து, கடந்த 30ஆம் திகதி இவ்விடயம் தொடர்பில் மூதூர் நீதிமன்றில் விசாரணைகள் நடைபெற்றது. அன்றைய தினம் நீதிபதி விடுத்த அறிவிப்பின்படி, புதன்கிழமை (6) நீதிமன்ற கூட்டம் நீதிபதி தலைமையில் நடைபெறும் எனவும், இக்கூட்டத்தின் பின்னர் இந்த மனித எச்சங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.