அபிவிருத்திகள் கடந்த காலங்களில் நாட்டின் சில பகுதிகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்ததன் காரணமாக ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளை நீக்கி சமமான அபிவிருத்தியை முழு நாட்டுக்கும் வழங்கும் விரிவான நிகழ்ச்சித் திட்டமொன்றை ஆரம்பிப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 180 அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வை முன்னிட்டு திவுலங்கடவல மத்திய கல்லூரியில் நேற்று முற்பகல் புதிய பாடசாலை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் சிங்கள அரசர்களுக்கு பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாரிய அபிவிருத்தி திட்டமான ‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ திட்டத்திற்கு 6,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது பொலன்னறுவை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக இதுவரையில் அரசாங்கம் ஒதுக்கியுள்ள பாரிய நிதியாகும். இதன் மூலம் மாவட்டம் எங்கிலும் பல்வேறு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளது. 2015 – 2018 வரை நூற்றுக்கணக்கான திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 180 அபிவிருத்தி திட்டங்கள் இவ்வாறு மக்களிடம் கையளிக்கப்படுகின்றன.
ஹிங்குரக்கொட, மெதிரிகிரிய, எலஹெர பிரதேச செயலாளர் பிரிவுகளில் சமயம், கல்வி, சுகாதாரம் மற்றும் பல்வேறு திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. இதன் கீழ் 60 புதிய அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகள் அமைச்சர்கள், நிபுணர்கள் மற்றும் கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
பொலன்னறுவை மட்டுமன்றி நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் இந்த பாரிய அபிவிருத்தி புரட்சி ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்தார். கொங்கிரீட் அபிவிருத்தியன்றி மக்களின் தேவை மற்றும் அவர்களது உணர்வுகளை புரிந்துகொண்டு மக்கள் சார்பு அபிவிருத்தியான இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கையை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்லும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்களிடம் கையளிக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் எதிர்கால தலைமுறையின் நலனை இலக்காகக் கொண்டதாகும். அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் புதிய அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கும் மற்றும் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வுகள் ஜனாதிபதி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டன.