“ஆச்சாரங்களுக்கு எதிரான சம்பவங்கள் நடந்தால் சபரிமலை கோயிலை பூட்டுவேன்” என்று கோயிலின் தந்திரி கண்டரரு ராஜீவரு அதிரடியாக தெரிவித்துள்ளார்.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்தது. இதையடுத்து சபரிமலைக்கு பெண்களும் வருவதற்கான ஏற்பாடுகளை கேரள அரசு செய்தது. சபரிமலை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆர்.எஸ்.எஸ். உட்பட சில இந்து அமைப்புகள் சில, சபரிமலைக்கு பெண்கள் வரக்கூடாது என போராட்டம் நடத்தின. மேலும், சபரிமலை அருகே கூடி, அய்யப்பனை தரிசிக்க வரும் பெண்களை தாக்கி திருப்பி அனுப்பின.
இதனால் பல இடங்களில் மோதல், தடியடி ஏற்பட்டு கலவரம் ஏற்பட்டது. வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், பம்பையில் இருந்து சபரிமலை நோக்கி ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவிதா உட்பட இரண்டு பெண்கள் அய்யப்பனை தரிசிக்க சென்றனர். வர்கள் அய்யப்பன் கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தற்போது இருக்கின்றனர்.
இவர்களுக்கு ஐஜி ஸ்ரீஜித் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு அளித்துள்ளனர்.
ஆனால் இந்த நிலையில் திடீரென கேளர அரசு, இந்த இரு பெண்களை திருப்பி அனுப்பும்படி காவல்துறைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
இருவரில் ஒருவர் பத்திரிகையாளர் மற்றவர் பெண்ணியவாதி. மற்றபடி இருவரும் பக்தர்கள் அல்ல என்று கேரள அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருவரும் பாதுகாப்பாக சபரிமலை பகுதியில் உள்ள வனத்துறை விருந்தினர் இல்லத்துக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அய்யப்பனை தரிசித்துவிட்டே திரும்புவோம் என்று வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களுடன் கேரள மாநில காவல்துறை ஐ.ஜி. சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
சூழல் சரியில்லை என்பதால் தற்போது அவர்கள் சபரிமலை அய்யப்பனை தரிசிக்காமல் திரும்புவது நல்லது என்று அவர் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் -சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு, “ஆச்சாரங்களுக்கு எதிராக ஏதாவது சம்பவங்கள் சபரிமலையில் நடந்தால் சந்நிதான நடையை அடைத்துப் பூட்டி சாவியை தேவஸ்வம் போர்டு அதிகாரிகளிடம் கொடுத்து விட்டுத் திரும்பிச்செல்வேன்” என்று தெரிவித்துள்ளார்.