அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குமாறு வலியுறுத்தி குருநாகலில் விஷேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு இடையேயான கலந்துரையாடலொன்று 6ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் பெயரிடப்படாவிட்டால் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட இராஜாங்க அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்திருந்தார்.
எனினும் குறித்த கால அவகாசம் கடந்துள்ள போதிலும் எந்தவொரு அமைச்சரும் பதவி விலகவில்லை.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் வாரமளவில் உரிய தீர்வு கிடைக்கப்பெறுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்தார்.