ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இரவு மங்கள சமரவீரவின் இல்லத்தில் நடந்த சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று, சஜித் மற்றும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து பேசினர். இதன்போது, பேசப்பட்ட விவகாரங்கள் இதுவரை வெளியாகாத நிலையில், அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்பக் பக்கத்தில் தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
“ஐதேமு பங்காளி கட்சிகளின், சஜித் பிரேமதாச தரப்பினருடனான கலந்துரையாடல் தீர்க்கமான முடிவுகளுடன் மங்கள சமரவீரவின் கொழும்பு இல்லத்தில் நேற்று நள்ளிரவுவரை நடந்தேறியது. ஐதேமு சார்பான ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தை அடுத்த வாரத்துக்கு மேல் இழுபறிபட ஒருபோதும் இபமளிப்பதில்லை என்பது உட்பட பல முக்கியமான முடிவுகள் எட்டப்பட்டன. இன்று ததேகூ உடன் ஐதேக சஜித் தரப்பினர் நடத்தும் கலந்துரையாடல் முடிவுறும்வரை, நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஏனைய முக்கிய முடிவுகள் தொடர்பில் ஐதேமு பங்காளி கட்சிகள் சார்பில் தற்போது பகிரங்கமாக பேசுவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டது.“ என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில், கூட்டத்தில் கலந்துக்கொண்டோர் சம்பிக ரணவக்க, மனோ கணேசன், பழனி திகாம்பரம், ரவுப் ஹக்கீம், நிசாம் காரியப்பர்), ரிசாத் பதியுதீன், மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹசிம், எரான் விக்கிரமரத்ன ஆகியோருடன் சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டிருந்தார்.
இன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், சுமந்திரன் மாத்திரமே சஜித்தை இரகசியமாக சந்திக்கிறார்கள்.
இதேவேளை, இன்று அல்லது நாளை ரணில், சஜித், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து பேசவுள்ளனர்.