ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நேற்றிரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் தொடர்பில் உத்தியோகபுர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லையெனவும் கூறப்படுகின்றது.
எனினும், அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குவதாயின், அவர் 20 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கும், அதிகாரப் பகிர்வுக்கும் உடன்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பான 20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவருவதற்கு அமைச்சர் சஜித் பிரேமதாச உடன்பாடு தெரிவிக்கவில்லையெனவும் அவ்வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதேவேளை, நாளைய தினம் (25) ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது.