‘ஹாட்ரிக் வெற்றியில் ஹாட்ரிக்’ அடிப்பாரா கார்த்தி என்று சில தினங்களுக்கு முன்புதான் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால், தனது மோசமான தோல்விப் படங்களால் இதற்கு முன்னர் அடித்த ஒரு ‘ஹாட்ரிக்’ தோல்வி போல கார்த்திக்கு இந்த ‘தேவ்’ படம் அமைந்துவிட்டது.
‘சகுனி, அலெக்ஸ் பாண்டியன், அழகுராஜா’ ஆகிய படங்கள்தான் கார்த்தியின் மிக மோசமான தோல்விப் படங்கள். அந்தப் படங்களில் கார்த்தி ஏன் நடித்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அந்தப் படங்களைப் போலவே ‘தேவ்’ படத்திலும் எதில் மயங்கி கார்த்தி நடிக்க சம்மதித்திருப்பார் என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். அந்தப் படங்களுக்குப் பிறகு கார்த்தியின் தோல்விப் படங்களாக அமைந்த ‘காஷ்மோரா’ படத்திலாவது அவர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘காற்று வெளியிடை’ படத்தைக் கூட தனக்கும், தன் அண்ணன் சூர்யாவுக்கும் குருவான மணிரத்னம் கேட்டதால் நடிக்க சம்மதித்துவிட்டார் என்று சொல்லிக் கொள்ளலாம்.
‘தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம்’ என இரண்டு சிறப்பான படங்களில் நடித்து தன் பெயரை இன்னும் ஒரு படி மேலே உயர்த்திக் கொண்ட கார்த்தி ‘தேவ்’ படத்தில் இப்படி தேவையில்லாமல் சிக்கிக் கொண்டாரே என அவருடைய ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.
படத்தைப் பார்த்த பலரும் முதல் காட்சி முடிந்ததுமே கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சமூக வலைத்தளங்களில் படம் பற்றி கிண்டலான பல கமெண்ட்டுகள் வர ஆரம்பித்துவிட்டன. சூர்யாவுக்கு ஒரு ‘அஞ்சான்’, கார்த்திக்கு ஒரு ‘தேவ்’ என்பதுதான் கமெண்ட்டுகளின் உச்சமாக உள்ளது.