எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இரு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் பொதுஜன பெரமுனவுடன் சுதந்திர கட்சி நாளை கைச்சாத்திடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்து. தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கான ஆயத்தங்களை முக்கிய கட்சிகளாக பார்க்கப்படுகின்ற பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவினை பெற்றுக்கொள்வதற்காக பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு வந்தது.
அந்தவகையில் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுனவுக்கே ஆதரவினை வழங்கவுள்ளதாக நிமல் சிறிபாலடி சில்வா இன்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.