முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களைக் காரணம் காட்டி கோத்தபாய ராஜபக்ச இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வுகளைத் தோற்றுவிக்க முயற்சித்து வருகின்றார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இந்துனில் துஷார அமரசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் செய்தியாளர்களிடம் நேற்றுத் தெரிவித்ததாவது:
சில நாள்களாக நாட்டில் விஜயகலா மகேஸ்வரனின் உரை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவர் அன்று மக்கள் முன்னிலையில் ஆற்றியிருந்த உரை வன்மையாகக் கண்டிக்க வேண்டிய விடயம்.
இருப்பினும் அவர் தனது தவறை ஒப்புக்கொண்டு அமைச்சுப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது விஜயகலாவின் உரையை நியாயப்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.இது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்லவே! இதுவும் சிங்கள, தமிழ் மக்களிடையில் மீண்டும் பிரச்சினையைத் தோற்றுவிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் மக்களின் நம்பிக்கைக்கு விரோதமான செயற்பாடாகவே இதனைக் கொள்ள வேண்டும் – என்றார்.