காபன் வரியை நீக்குவது தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் இந்த சட்டமூலம் நேற்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2018ஆம் ஆண்டு டிசெம்பர் 01 ஆம் திகதி முதல் காபன்வரியை அகற்றுவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பசுமைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வேலைத்திட்டத்தை அமுலாக்கும் வகையில், 2018ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தில் காபன் வரி அறிவிடும் திட்டம் முன்வைக்கப்பட்டிருந்தது.
முன்மொழியப்பட்டவாறு எஞ்சின் கொள்ளளவின் அடிப்படையில் வாகன உரிமையாளர்களிடமிருந்து சிறுதொகை பணம் அறிவிடப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வாகனத்தை பதிவு செய்யும் வருடத்தில் அன்றி வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் சந்தர்ப்பங்களில் காபன் வரியைச் செலுத்த வேண்டும்.
அத்துடன், பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்து வண்டிகளிடமிருந்து வருடாந்த கட்டணமாக காபன் வரி அறவிடப்படுவதாக அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.