சம்பூர் மற்றும் கடற்கரைச்சேனைக் கிராமங்களில் இதுவரை விடுவிக்கப்படாத காணிகளை உடன் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்தியச் செயலகத்தில் நேற்று முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
சம்பூர் மற்றும் கடற்கரைச்சேனைக் கிராமங்களில் உள்ள 3 கிராம அபிவிருத்திச்சங்கப் பிரதிநிதிகள் இணைந்து காணிகளின் ஆவணங்களையும், மனுவையும் கையளித்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
”சம்பூர் பிரதேசத்தில் உள்ள நான்கு முக்கிய காணிப் பிரச்சினைகள் சம்பந்தமாக ஆணைக்குழுவிடம் ஆதாரங்களுடனான கோவைகள் மற்றும் கடிதங்களைக் கையளித்துள்ளோம்.
அதனுடன் முறைப்பாட்டையும் பதிவு செய்தோம். எமது கிராமங்கள் அனல் மின் நிலையத் திட்டத்தாலும், மீள்குடியேற்ற நடவடிக்கைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தொடர்ச்சியாக நாம் பல தரப்பிலும் முறையிட்டு வருகின்றோம். எங்களுடைய கிராமம் மூன்று கட்டங்களாகக் குடியேற்றப்பட்டது.
365 குடும்பங்கள் பின்னர் படிப்படியாக 950 குடும்பங்கள் வரை, குடியேற்றப்பட்டது. அதன்போது 818 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்கான முறையான ஆவணங்கள் தரப்படவில்லை.
அதனை வழங்க ஆவன செய்ய வேண்டும். சாயக்கர வட்டவான் என்ற பகுதியில் 40 ஏக்கர் காணிகளைக் கடற்படை கோரியதற்கிணங்க 18 குடும்பங்கள் விட்டுக்கொடுத் தனர். அதற்கான மாற்று ஒழுங்கு எதுவும் இன்னும் செய்யப்பட வில்லை. ஆனாலும் படையினர் 400 க்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளைப் பிடித்து வைத்துள்ளனர்.
அவை அனைத்தும் எமது மக்களின் வாழ்வாதாரக் காணிகள். அனல் மின் நிலயத்துக்கு நீர் மற்றும் நிலக்கரி கொண்டு செல்வதற்கான பாதையமைப்புக்கென 49 குடும்பங்களின் காணிகள் எடுக்கப்பட்டன. அவையும் இன்னும் முறையாக மீளக்கையளிக்கப்படவில்லை.
அனல்மின் நிலையம் கைவிடப்பட்ட நிலையில் அவை மீள வழங்கப்பட வேண்டும். மேற்படி பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தும் வகையில் ஆவணங்களைச் சேகரித்து அதற்கான கடிதங்களையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளோம் ” என்று சம்பூர் கிழக்கு கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் எஸ்.சண்முகநாதன் தெரிவித்தார்.