மன்னார் பேசாலையைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் மனைவி பாதுகாப்பு கோரி மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு வாய்மொழி மூலம் நேற்று (புதன்கிழமை) மனித உரிமை ஆணைகுழுவின் மன்னார் மாவட்ட உப காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட நபரொருவரின் மனைவியான ஆனந்த ராஜா எட்னா டயஸ் என்பவரே, தனக்கும் தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த பெண்ணின் கணவன் காணாமலாக்கப்பட்ட விடயம் தொடர்பான வழக்கு 15ஆம் திகதி மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில, கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் குறித்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த சிலர், வீட்டுக்குள் ஆயுதம் புதைக்கப்பட்டுள்ளாக தெரிவித்து அச்சுறுத்தி சோதனை செய்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் காரணமாக தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் உயிர் ஆபத்து காணப்படுவதாகவும் எனவே தங்களுக்குரிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தறுமாறு கோரி குறித்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு பேசாலை பாடசாலைக்கு அருகில் இலங்கை கடற்படையினரால் குறித்த பெண்னின் கணவன் கைது செய்யப்பட்டு காணமல் ஆக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.