இஸ்ரேல் நகர் ஒன்றின் மீது கடந்த பல வாரங்களில் காசாவில் இருந்த ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று காசாவில் சரமாரி வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
காசாவின் 20 இலக்குகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டு மேலும் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.
25 வயது நஜீப் அஹமது அல் சனீன் என்ற இளைஞர் வடக்கு காசாவில் இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வில் பாடசாலைக்கு செல்லும் வழியில் 6 சிறுவர்களும் காயமடைந்தவர்களில் அடங்குகின்றனர்.
இஸ்ரேலிய போர் விமானங்கள் காசாவின் தென் பகுதியில் உள்ள தளங்களை இலக்கு வைத்து பல தாக்குதல்களிலும் ஈடுபட்டதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேபோன்று காசாவின் மத்திய பிராந்தியத்தில் பாரிய வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. தெற்கு காசாவின் கான் யூனிசிலும் சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
தெற்கு இஸ்ரேலின் பீா்ஷெபாவில் உள்ள வீடு ஒன்றின் மீது காசாவில் இருந்து வீசப்பட்ட ரொக்கெட் குண்டு விழுந்து சேதம் ஏற்பட்டதை அடுத்தே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
“அதிகாலை 4 மணிக்கு காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டு வீசப்பட்டதை அடுத்து பீர்ஷெபா நகரின் இஸ்ரேலியர் குண்டு பாதுகாப்பு முகாம்களை நோக்கி ஓடினர்” என்று இஸ்ரேல் இராணுவம் ட்விட்டர் ஊடே குறிப்பிட்டுள்ளது.
“நாம் இஸ்ரேல் பொதுமக்களை பாதுகாப்போம்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களுக்கு காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பே முழுப் பொறுப்பு என்று இஸ்ரேல் குறிப்பிட்டபோதும், அந்த அமைப்பு அதனை மறுக்கிறது.
காசாவில் இருந்து வீசப்பட்ட மற்றொரு ரொக்கெட் குண்டு டெல் அவிவுக்கு அருகில் கடலில் விழுந்துள்ளது. எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
காசாவில் ஹமாஸ் அமைப்பின் இராணுவ பயிற்சி முகாம் ஒன்று இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று ரொக்கெட் குண்டு வீசப்பட்ட குழுவும் வான் தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.