கல்வி அமைச்சில் கடமைகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் இருவர் எவ்வித காரணமும் இன்றி பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்து , சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் றோஹிணி கவிரத்ன பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்ற சபையின் அலுவலகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் வியாக்கிழமை (23) சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளமையானது சமூகத்திலும் , ஆசிரியர்கள் மத்தியிலும் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு பாரதூரமான தாக்குதலுக்கு உள்ளாகியவர்கள் அன்றைய தினம் தமது தேவைகளுக்காக குறித்த அலுவலகத்திற்குச் சென்றிருந்தவர்களாவர். இவர்கள் எவ்வித காரணமும் இன்றி பாரதூரமாக தாக்கப்பட்டதோடு மாத்திரமின்றி கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நியாயமற்ற செயற்பாட்டில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை இனங்கண்டு , துரிதமாக அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.