கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு தினங்களுக்குள் தீர்வொன்றைப் பெற்றுத்தருவேன் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
மேலும், இதனை எவரும் இனங்களுக்கிடையிலான பிரச்சினையாக சித்தரித்து விடக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வலியுறுத்தி மதத்தலைவர்களினால் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று (சனிக்கிழமை) தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று முற்பகல் போராட்டக்களத்திற்குச் சென்ற பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அத்தோடு போராட்டத்தையும் தற்காலிகமாக கைவிடும்படி கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் அங்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.