சென்னை மெரினா அரினாவில் கூடியிருந்த ரசிகர்களின் கூட்டம் 89-வது நிமிடம் வரை ஏங்கிக்கொண்டிருந்தது, ஒரே ஒரு கோலுக்காகத்தான். `வெற்றி பெறாமல்போனாலும் பரவாயில்லை. ஆனால், தோற்றுவிடக் கூடாது’ என்பதுதான் நேற்றைய போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த, சென்னை ரசிகர் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு. அதற்கு ஏற்றாற்போல் 89-வது நிமிடத்தில் சென்னையின் முகமது ரஃபி ஹெட்டிங் செய்து கோலடிக்க, கூடியிருந்த 13,195 ரசிகர்களும் உற்சாகத்தின் உச்சத்துக்குச் சென்றனர். கடைசிவரை விறுவிறுப்பாகச் சென்ற ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிரான இந்தப் போட்டியை, சென்னை அணி போராடி டிரா செய்து, புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டது. இதன்மூலம், அடுத்த சுற்று வாய்ப்பிலும் நீடிப்பது டபுள் சந்தோஷம்தானே!
ஐ.எஸ்.எல் புள்ளிப் பட்டியலில் முறையே 3-வது மற்றும் 4-வது இடங்களில் உள்ள சென்னையின் எஃப்.சி மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள், நேற்று மாலை சென்னை மெரினா அரினாவில் மோதிக்கொண்டன. இரு அணிகளும் வெற்றிக்காகப் போராடிய இந்த ஆட்டம் 1-1 என்ற கோல்கணக்கில் டிராவில் முடிந்தது. ஜாம்ஷெட்பூர் அணிக்காக வெல்லிங்டன் பிரயோரி மற்றும் சென்னை அணிக்காக முகமது ரஃபி ஆகியோர் கோல் அடித்தனர்.