இந்திய கிரிக்கெட் அணிக்காக 2000-ஆம் ஆண்டு களமிறங்கிய யுவராஜ் சிங் துவக்கத்திலிருந்தே கிரிக்கெட் உலகின் அபாயகரமான வீரர் என்ற சிறப்பு பெருமையை பெற்றவர்.2007-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி-20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது இக்கட்டான நேரத்திலும் ஆறு பந்தில் ஆறு சிக்சர்களை விரட்டி ஸ்டுவர்ட் பிராடின் பந்துவீச்சை பிழிந்தெடுத்தார்.
2011-ஆம் உலககோப்பையில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றுவதற்கு மிக முக்கிய காரணம் யுவராஜ் சிங் தான். ஒன்பது போட்டிகளில் ஒரு சதம் மற்றும் நான்கு அரை சதம் உட்பட 362 ரன்களை குவித்து,15 விக்கெட்டுகளுடன் தொடர் நாயகன் விருதை வென்றார் யுவராஜ் சிங்.
2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பின்னர் புற்றுநோய் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகிய யுவராஜ் சிங் அவ்வப்போது இந்திய அணிக்குள் சேர்க்கப்படுவதும், நீக்கப்படுவதுமாக இருந்தார்.
2014-ம் ஆண்டு டி-20 உலகக் கோப்பையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த திணறிய யுவராஜ் சிங் இந்திய அணியில் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டப்பட்டார்.கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினார்.அதன்பின் கழற்றி விடப்பட்ட யுவராஜ்சிங்கை தேர்வு குழுவினர் கண்டு கொள்ளவில்லை.
ஆனாலும் அணிக்கு தேர்வாக கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ஓய்வு குறித்து 2019-ஆம் ஆண்டுக்கு பிறகே முடிவு எடுப்பேன் என யுவராஜ்சிங் கூறியுள்ளார்.