ஐ. பி. எல் தொடர்பாக சூதாட்டம் நடத்தியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட சோனு ஜாலனிடம் இருந்து பல முக்கிய ஆவணங்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த ஆவணங்களை போலீசார் தற்போது மீடியாக்களில் கசியவிட்டுள்ளனர்.
சூதாட்டம் தொடர்பான விசாரணையில் மேலிடத்திலிருந்து விசாரணை செய்த அதிகாரிகளுக்கு வந்த பல்வேறு உத்தரவுகளால் இந்த தகவல்களை வெளியே கசிய விட்டதாக கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் இருந்தே, இந்த தொடரை வைத்து சூதாட்டம் நடத்தியாக பல்வேறு மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டனர்.
ஒவ்வொரு மாநில போலீஸ் அதிகாரிகளும் தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திடீர் சோதனைகளில் ஈடுபட்டு வந்தனர். இதில் மத்திய பிரதேச மாநிலம்தான் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் சூதாட்டத்தின் தலைமை இடமாக செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சோனு ஜாலன் என்பவரை மும்பை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சர்வதேச சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு வைத்து கொண்டு ஐ. பி. எல் தொடரை வைத்து சூதாட்டம் நடத்திய பல்வேறு முக்கிய ஆவணங்களையும், சூதாட்டம் நடத்தியதற்கான ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். சோனு உள்பட அவனது கூட்டாளிகள் சூதாட்டம் நடத்திய சான்றுகளும் வெளியிடப்பட்டுள்ளது.
10 காலர் ஐடி போன், டேப் ரிக்கார்டர், பணம் எடுக்கும் ஸ்வைப் மிஷின்கள் 10, பணம் கட்டி சூதாடிய நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் உள்பட பல்வேறு முக்கியமான ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
இந்த சூத்தாட்டப் புகாரில் ஏற்கனவே சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ்கானை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட முக்கியமான ஆவணங்கள் வெளியாகி இருப்பது கிரிக்கெட் வாரியத்திற்கு சிக்கலை உண்டாக்கியுள்ளது.