அரசாங்கம் இதுவரை முன்னெடுத்த விடயங்களைச் சுட்டிக்காட்டியே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேலும் கால அவகாசம் கோருகிறது எனவும் இது தொடர்பில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தத் தேவையில்லை எனவும் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோகங்கள் தொடர்பான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஆரம்பித்த வேலைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு கால அவகாசம் தேவை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மின்சாரக் கதிரைக்குத் தன்னை கொண்டு செல்லப்போகின்றனர் எனக் கூறியே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரசாரங்களை மேற்கொண்டார்.
எனினும், தற்பொழுது பணம் கொடுத்துக்கூட மின்சாரக் கதிரை பற்றி எவரும் கதைக்க முடியாதளவுக்கு நிலைமைகளை மாற்றியுள்ளோம்.
இந்த நாட்டில் உள்ள சகல இனத்தவர்களும் சமமான பிரஜைகளாகவும், சமமான பொறுப்பைக் கொண்டவர்களாகவும் வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அதனை அடிப்படையாகக் கொண்டே அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.