நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி நீதிமன்றத்தை நாடியமை சிறந்தது. ஆனால் தற்போது நீதிமன்றத்துக்கு அழுத்தத்தை பிரயோகிக்க முனைகின்றமை தவறானதென உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக 11 மனுக்கள் இன்று (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற வளாகத்துக்கு சென்ற உதய கம்மன்பில, அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்துள்ளதாவது,
“தற்போது நாட்டில் தோன்றியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை பெறுவதற்கு நாடாளுமன்றத்தை கூட்டுவதனை காட்டிலும் பொது தேர்தலுக்கு சென்று மக்களின் ஆணையை பெறுவதே சிறந்ததாகும்.
மேலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு நீதிமன்றத்தை ஐக்கிய தேசிய கட்சி நாடியுள்ளமை வரவேற்கத்தக்கதோர் விடயமாகும். ஆனால் இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அழுத்தத்தை பிரயோகிக்க முனைகின்றமையானது ஏற்ககூடிய ஒன்றல்ல.
மேலும் ஐக்கிய தேசிய கட்சியினர் எண்ணுவதை போன்று அவர்களுக்கு சார்பாக ஒருபோதும் தீர்ப்பு கிடைக்காது” என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்..