தேர்தலை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (20) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தினைக் கலைப்பதற்காக பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இன்று (20) திங்கட்கிழமை கொழும்பு – டெக்னிகல் சந்தியில் கூடிய ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்களால் கொட்டும் மழையிலும் அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களுடன் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தினைக் கட்டுப்படுத்துவதற்காக குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

எவ்வாறிருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் கொழும்பில் பல இடங்களுக்குள் பிரவேசிக்க தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி, பாதசாரிகள் அல்லது வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

அதற்கமைய ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு மற்றும் காலி முகத்திடல் பகுதிக்குள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இன்று (20) முற்பகல், கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல வீதிகளுக்குள் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஆர்ப்பாட்டம் நுழைவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கை கொழும்பு பிரதான நீதவானால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் (20) டெக்னிகல் சந்தியில் சுமார் 2 மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமையினால் அவ்வழியூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டது.
எனவே ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு பொலிஸாரினால் அறிவிக்கப்பட்ட போதிலும் , அவர்கள் செல்லவில்லை. இதனையடுத்தே ஆர்ப்பாட்டத்தினைக் கலைப்பதற்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

அதனையடுத்து சுமார் 4 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அங்கிருந்து கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.


(படப்பிடிப்பு சுஜீவகுமார்)