ஐக்கிய தேசிய முன்னணியின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் என, பிரதியமைச்சர் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார். அனை நிறைவேற்றிக் கொள்வதற்கான பெரும்பான்மை தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது அரசாங்கத்தை சக்தியான பலமான அரசாங்கமாக மாற்றும் தேவை இருப்பதால், தேசிய அரசாங்கம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
எங்களுடன் இணைந்து கொள்ள சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் தயாராக இருக்கின்றனர். இதன்போது 30 அமைச்சர்கள் என்ற எண்ணிக்கையிலிருந்து, 5 அல்லது 6 அமைச்சுக்களை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் அரசியலமைப்பிற்கு உட்படப்ட வகையில் அதனை எவ்வாறு செய்வது என்பதிலேயே எங்களுக்கு பிரச்சினை இருக்கிறது. அதைவிடுத்து, 45 அமைசுக்கள், 48 பிரதியமைச்சர்கள் என 93 அமைச்சர்களை நியமிக்கும் எண்ணம் எதுவும் இல்லை.
எங்களுக்கு பலமான அத்துடன் நிலையான ஒரு அரசாங்கத்தை அமைக்ககும் அவசியம் இருக்கிறது. அது நாட்டிற்கும் இருக்கிறது. அதற்காக நாடாளுமன்றின் அனுமதியுடன் அமைச்சர்களின் எண்ணிக்கையை 35 அல்லது 36 ஆக அதிகரிக்க யோசித்தோம்.
எங்களுக்கு ஆதரவு கொடுக்கும் உறுப்பினர்களுடன் இன்னும் இது குறித்து கலந்துரையாட வேண்டியுள்ளதால். தேசிய அரசாங்க யோசனை பிற்போடப்பட்டுள்ளது.
ஆனாலும், வரவு செலவுத் திட்டத்தை வெற்றி கொள்வதென்பது எமக்கு சவாலான விடயம் அல்ல. வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற எங்களுககு பெரும்பான்மை இருக்கிறது.” என கூறியுள்ளார்.